மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்
34. உயிருண்ணிப்பத்து
திருப்பெருந்துறையில் அருளியது
சிவானந்த மேலிடுதல்
கலிவிருத்தம்
பைந்நாப்பட அரவேரல்குல்
    உமைபாகம தாய்என்
மெய்ந்நாள்தொறும் பிரியாவினைக்
    கேடாவிடைப் பாகா
செந்நாவலர் பரசும்புகழ்த்
    திருப்பெருந்துறை உறைவாய்
எந்நாள்களித் தெந்நாள்இறு
    மாக்கேன் இனியானே.
1
நானாரடி யணைவானொரு
    நாய்க்குத் தவிசிட்டிங்கு
ஊனாருடல் புகுந்தான்உயிர்
    கலந்தான்உளம் பிரியான்
தேனார்சடை முடியான்மன்னு
    திருப்பெருந்துறை உறைவான்
வானோர்களும் அறியாததோர்
    வளம்ஈந்தனன் எனக்கே.
2
எனைநானென்ப தறியேன்பகல்
    இரவாவதும் அறியேன்
மனவாசகங் கடந்தான்எனை
    மத்தோன்மத்த னாக்கிச்
சினமால்விடை உடையான்மன்னு
    திருப்பெருந்துறை உறையும்
பனவன்எனைச் செய்தபடி
    றறியேன் பரஞ்சுடரே.
3
வினைக்கேடரும் உளரோபிறர்
    சொல்லீர்விய னுலகில்
எனைத்தான்புகுந் தாண்டான்என்
    தென்பின்புரை யுருக்கிப்
பினைத்தான்புகுந் தெல்லேபெருந்
    துறையில்உறை பெம்மான்
மனத்தான் கண்ணின்
    அகத்தான்மறு மாற்றத் திடையானே.
4
பற்றாங்கவை அற்றீர்பற்றும்
    பற்றாங்கது பற்றி
நற்றாங்கதி அடைவோமெனிற்
    கெடுவீரோடி வம்மின்
தெற்றார்சடை முடியான்மன்னு
    திருப்பெருந்துறை இறைசீர்
கற்றாங்கவன் கழல்பேணின்
    ரொடுங்கூடுமின் கலந்தே.
5
கடலின்திரை யதுபோல்வரு
    கலக்கம்மலம் அறுத்தென்
உடலும்என துயிரும்புகுந்
    தொழியாவண்ணம் நிறைந்தான்
சுடருஞ்சுடர் மதிசூடிய
    திருப்பெருந்துறை உறையும்
படருஞ்சடை மகுடத்தெங்கள்
    பரன்தான் செய்தபடிறே.
6
வேண்டேன்புகழ் வேண்டேன்செல்வம்
    வேண்டேன் மண்ணும் விண்ணும்
வேண்டேன்பிறப் பிறப்புச்சிவம்
    வேண்டார் தமை நாளுந்
தீண்டேன்சென்று சேர்ந்தேன் மன்னு
    திருப்பெருந்துறை இறைதாள்
பூண்டேன்புறம் போகேன்இனிப்
    புறம்போகலொட் டேனே.
7
கோற்றேன்எனக் கென்கோகுரை
    கடல்வாய்அமு தென்கோ
ஆற்றேன்எங்கள் அரனேஅரு
    மருந்தேஎன தரசே
சேற்றார்வயல் புடைசூழ்தரு
    திருப்பெருந்துறை உறையும்
நீற்றார்தரு திருமேனிநின்
    மலனேஉனை யானே.
8
எச்சம்அறி வேன்நான்எனக்
    கிருக்கின்றதை அறியேன்
அச்சோஎங்கள் அரனேஅரு
    மருந்தேஎன தமுதே
செச்சைமலர் புரைமேனியன்
    திருப்பெருந்துறை உறைவான்
நிச்சம்என நெஞ்சில்மன்னி
    யானாகிநின் றானே.
9
வான்பாவிய உலகத்தவர்
    தவமேசெய அவமே
ஊன்பாவிய உடலைச்சுமந்
    தடவிமர மானேன்
தேன்பாய்மலர்க் கொன்றைமன்னு
    திருப்பெருந்துறை உறைவாய்
நான்பாவியன் ஆனால்உனை
    நல்காயென லாமே.
10
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com